நம்மூர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் :65 வேட்பு மனுக்கள் தாக்கல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது . இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது.வேட்புமனுதாக்கல் செய்ய கால அவகாசம் 10ம் தேதி முதல் 17தேதி வரை இருந்த நிலையில் சனி,ஞாயிறு மற்றும் பொங்கல் அரசு விடுமுறை தவிர்த்து வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய 10,13,17ஆகிய தேதியில் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்யக்கூடிய சூழல் இருந்தது.
இந்நிலையில் வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாளான இன்று (ஜன.17) ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் அவருக்கு மாற்று வேட்பாளராக மேனகா நவனீதனும், திமுக சார்பில் வி.சி. சந்திரகுமாரும் அவருக்கு மாற்று வேட்பாளர் அவரது மனைவி அமுதாவும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக வேட்புமனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு காத்திருந்து வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.இதனை தொடர்ந்து, வேட்பு மனுத்தாக்கல் நிறைவு குறித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. இன்று மட்டும் 55 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில்,, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 4பேர் உட்பட 40 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு பரிசீலனை நாளை காலை 11 மணிக்கு நடைபெறும். தொடர்ந்து 20 ம் தேதி 3மணி வரை வேட்பு மனு வாபஸ் பெறலாம். அதன்பிறகு சின்னம் ஒதுக்கீடு செய்து வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றது தொடர்பாக இதுவரை 12 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதில் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால்3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பறிமுதல் செய்யப்பட்ட 9லட்சத்து 42ஆயிரம் ரூபாய் கருவூலத்தில் உள்ளது.
இதுவரை தேர்தல் விதிமுறை மீறியதாக 5 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் சியுஜி செயலி மூலம் 3 புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் சின்னம் ஒதுக்கீடு என்பது அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமையும், சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே சின்னத்தை இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ கேட்கும் போது குலுக்கல் முறையில் வழங்கப்படும் . இவ்வாறு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்தார்.