ஆன்மீகம்

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி, இவ்வாண்டின் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 26- ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதனையொட்டி குண்டம் இறங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்,கடந்த 6 ம் தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர், நேற்று இரவு குண்டத்தில் எரிகரும்பு,விறகுகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக நேற்று முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் அதிகாலை , பூசாரிகள் அம்மனிடம் வாக்கு கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு தலைமை பூசாரி , குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து முதன் முதலில் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். தலைமை பூசாரியை தொடர்ந்து கோயில் பூசாரிகள் குண்டம் இறங்கினார். அதை தொடர்ந்து , குண்டம் இறங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.இந்த குண்டம் இறங்கும் நிகழ்வினை தொடர்ந்து நாளை 10 ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும்,11 ம் தேதி இரவு, அம்மன் அலங்கரிக்கப்பட்ட மலர்ப் பல்லக்கில் கோபி நகருக்குள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 12 ம் தேதி கோபியில் தெப்போற்சவமும், 13 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை கோபி, புதுப்பாளையம், நஞ்சகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மஞ்சள் நீர் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இந்த திருவிழா, வரும் 18 ம் தேதி மறுபூஜையுடன் நிறைவு பெறுகிறது